விராட் கோலி, ரோஹித் சர்மா எப்போது ஓய்வுபெற வேண்டும்? - கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்!

Updated: Fri, Apr 26 2024 20:24 IST
விராட் கோலி, ரோஹித் சர்மா எப்போது ஓய்வுபெற வேண்டும்? - கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இன்னும் சில தினங்களில் தங்கள் அணி வீரர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தூதுவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணி கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங், அத்தொடரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனையை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டும், இத்தொடரில் யார் துருப்புச்சீட்டாக இருப்பார் மற்றும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது கிரிக்கெட் எதிர்காலங்கள் குறித்து யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்டரான சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இருப்பார். ஏனெனில் அவரால் எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும். என்னை பொறுத்தவரையில் அவர் தான் துருப்புச்சீட்டாக இருப்பார். 

அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்ப்பார்க்கிறேன். அதேபோல அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்றால், அவரை தாராளமாக பிளேயிங் லெவனில் எடுக்கலாம். ஒருவேளை அவர் அணியில் இல்லாத பட்சத்தில் இளம் வீரர்களுக்கு அந்த வாய்ப்பினை வழங்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தற்சமயம் சிரப்பான ஃபார்மில் உள்ளதாக நினைக்கிறேன். 

இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபேவை நான் பார்க்க விரும்புகிறேன். அவருக்கு அணியில் தொடர் வாய்ப்புகள் இல்லை. இந்த ஐபிஎல் சீசனில் அவர் சிறப்பாக செயல்பட்டுவருவதுடன், ஆட்டத்தை மாற்றும் திறனையும் கொண்டுள்ளார். இந்த சீசனில் நிறைய இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், உலகக்கோப்பை அணியில் நான் ஷிவம் தூபேவை பார்க்க விரும்புகிறேன். மேலும் அணியின் மூத்த வீரர்கள் என்னதான் தரமான ஃபார்மில் இருந்தாலும் அதை மறந்து, வயதின் அடிப்படையில் மூத்த வீரர்கள் மீது விமர்சனங்கள் எழும்.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணியின் சிறந்த வீரர்கள். அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்த முடிவை அறிவிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும் மூத்த வீரர்கள் தொடர்ச்சியாக 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால், டி20 கிரிக்கெட்டைல் அதிக இளம் வீரர்களை பார்க்க விரும்புகிறேன். அது அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை கட்டமைக்க உதவும். இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு, நிறைய இளைஞர்கள் அணிக்குள் வருவதையும், அடுத்த உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறுவதையும் பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை