WI vs IND 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால்; ரன்குவிப்பில் விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் இடையே 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் அணியின் அறிமுக வீரராக களமிறங்கப்பட்டார். ஆட்டம் தொடங்கியது முதலே ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் சதம் விளாசினார். அறிமுக டெஸ்ட்டில் சதம் விளாசிய 17வது இந்தியர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார்.
இந்நிலையில், போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஜெய்ஸ்வால் 150 ரன்களை கடந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் 171 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானேவும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இருபினும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக ரவீந்திர ஜடேஜாவும் அதிரடியாக விள்யாடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்திய அணி தரப்பில் விராட் கோலி 72 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமார் ரோச், அல்ஸாரி ஜோசப், வாரிகன், அலிக் அதானாஸ் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 250 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.