விராட் கோலிக்கு வாழ்த்து கூறிய ஷுப்மன் கில், முகமது சிராஜ் & புவனேஷ்வர் குமார்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவருமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாஅக இன்று அறிவித்து, பல முன்னாள் இன்னாள் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் விராட் கோலியின் ஓய்வு முடிவானது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விராட் கோலி விட்டுச்சென்ற இடத்தை யார் நிறப்புவார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் விராட் கோலிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஷுப்மன் கில் தனது எக்ஸ் பதிவில், “நான் உங்களுக்காக எழுதும் எதுவும் நான் என்ன உணர்கிறேன் அல்லது நீங்கள் என் மீது ஏற்படுத்திய தாக்கத்தை ஒருபோதும் உண்மையிலேயே பிரதிபலிக்காது. நான் 13 வயதில் நீங்கள் பேட்டிங் செய்வதைப் பார்த்து, அந்த வகையான ஆற்றலை யாராவது எப்படி மைதானத்திற்கு கொண்டு வர முடியும் என்று யோசித்துள்ளேன்.
அது முதல் - உங்களுடன் மைதானத்தைப் பகிர்ந்து கொள்வது மற்றும் உங்களைப் போல் வேறு யாராலும் செயல்பட முடியாது என்பதை உணர்ந்தது வரை - நீங்கள் ஒரு தலைமுறையை மட்டும் ஊக்கப்படுத்தவில்லை, மில்லியன் கணக்கான மக்களின் மனநிலையை மறுவடிவமைத்துள்ளீர்கள். டெஸ்ட் கிரிக்கெட் உங்களுக்கு எவ்வளவு அர்த்தம் என்று எனக்குத் தெரியும், மேலும் எங்கள் தலைமுறை அதே நெருப்பையும் அர்ப்பணிப்பையும் முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன் எல்லாவற்றிற்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
முகமது சிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "என் சூப்பர் ஹீரோவுக்கு, டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்கள் அற்புதமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். உங்கள் மரபு என்றென்றும் நிலைத்திருக்கும். என்னைப் போன்ற பல தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு நீங்கள் உத்வேகம் அளித்துள்ளீர்கள், உங்கள் சாதனைகள் மற்றும் நீங்கள் உங்களை எவ்வாறு நடத்தினீர்கள் என்பதன் மூலம் தொடர்ந்து அதைச் செய்துள்ளீர்கள். நீங்க இல்லாமல் டிரஸ்ஸிங் ரூம் பழைய மாதிரி இருக்காது. எனக்கு எப்போதும் ஆதரவு கொடுத்து, நல்லா விளையாட ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் விராட் கோலி” என்று பதிவுசெய்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இதுதவிர்த்து புவனேஷ்வர் குமார் தனது பதிவில், “டெஸ்ட் வடிவத்தில் விராட் கேப்டனாக இருந்த விதம், ஒரு அணியாக நாங்கள் மாறிய விதத்திற்கு அவர் பாராட்டுக்குரியவர், அதற்குக் காரணம் விராட்டின் மைதான இயல்புதான் என்று நினைக்கிறேன். அவர் ஆக்ரோஷமானவர், அது நம் அனைவருக்கும் தெரியும், டெஸ்ட் கிரிக்கெட்டில், அந்த இயல்பு எங்காவது தேவை, ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஐந்து நாட்கள் நீடிக்கும் ஒரு வடிவம். விராட்டின் பசிதான், ‘நாம் ஏதாவது செய்ய வேண்டும், நாம் வெறுமனே சில விஷயங்களைச் செய்ய வேண்டியதில்லை, வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்’ என்று சொன்னது. விராட்டின் ஆர்வம் எல்லோரிடமும் பரவியது என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.