ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷுப்மன் கில் 66 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முயிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்களை குவித்தது.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். அதன்பின் இணைந்த தியான் மேயர்ஸ் - கிளைவ் மடாண்டே ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிளைவ் மடாண்டே 37 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய தியான் மேயர்ஸ் அரைசதம் கடந்தார்.
ஆனாலும் ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக வாஷிங்டன் சுந்தர் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய வீரர் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச்சானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் நான்காவது ஓவரை ஆவேஷ் கான் வீச அந்த ஓவரின் முதல் பந்தை பிரையன் பென்னட் பவுண்டரி அடிக்க முயற்சித்து பந்தை பாய்ண்ட் திசையை நோக்கி அடிக்க, அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ரவி பிஷ்னோய் அபாரமாக தாவியதுடன் பந்தையும் பிடித்தார். இந்நிலையில் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது வைரலாகி வருகிறது.