
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை (பிப்ரவரி 6)முதல் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கு தொடர் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர் ஜோ ரூட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மஹ்மூத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் இங்கிலாந்து ஒருநாள் அணியில் ஜோ ரூட் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.