1st Test, Day 2: ஒல்லி போப் அபார சதம்; இங்கிலாந்து அணி ரன் குவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்துள்ளது.

ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ப்போட்டியானது ஹெடிங்லேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 42 ரன்னிலும், சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லும் சதமடித்தார். பின் 16 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 101 ரன்களைச் சேர்த்த கையோடு யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேப்டன் ஷுப்மன் கில் 127 ரன்களுடனும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்தார். பின் 19 பவுண்டரி, ஒரு சிக்சர் என 147 ரன்களில் ஷுப்மன் கில்லும், 12 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 134 ரன்களில் ரிஷப் பந்தும் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.
இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் பென் டக்கெட் 9 பவுண்டரிகளுடன் 62 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜோ ரூட்டும் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 9அவது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அதன்பின் நிதானமாக விளையாடி வந்த ஜோ ரூட் பெரி ஸ்கோரை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஒல்லி போப் 100 ரன்களுடனும், ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனையடுத்து 262 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் அட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now