
ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ப்போட்டியானது ஹெடிங்லேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 42 ரன்னிலும், சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லும் சதமடித்தார். பின் 16 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 101 ரன்களைச் சேர்த்த கையோடு யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேப்டன் ஷுப்மன் கில் 127 ரன்களுடனும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்தார். பின் 19 பவுண்டரி, ஒரு சிக்சர் என 147 ரன்களில் ஷுப்மன் கில்லும், 12 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 134 ரன்களில் ரிஷப் பந்தும் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.