
ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கை அளித்து வருகிறார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களையும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் சேர்த்திருந்தனர்.
இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஸாக் கிரௌலி 4 ரன்களிலும், அரைசதம் கடந்து அசத்திய பென் டக்கெட் 9 பவுண்டரிகளுடன் 62 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜோ ரூட்டும் 28 ரன்களை மட்டுமே சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 9அவது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.