1st Test, Day 3: சதத்தை தவறவிட்ட ஹாரி புரூக்; பும்ரா அசத்தல் பந்துவீச்சு - முன்னிலையில் இந்தியா!
ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 465 ரன்களில் ஆல் அவுட்டானது.

ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் 99 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களையும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் சேர்த்திருந்தனர்.
இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஒல்லி போப் 100 ரன்களுடனும், ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் ஒல்லி போப் 14 பவுண்டரிகளுடன் 106 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸும் 20 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார்.
இருப்பினும் அதிரடியாக விளையாடி வந்த ஹாரி புரூக் சதத்தை நெருங்கிய நிலையில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 99 ரன்களில் விக்கெட்டை இழந்து நூழிலையில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜேமி ஸ்மித் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்களையும், கிறிஸ் வோக்ஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களையும், பிரைடன் கார்ஸ் 22 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 465 ரன்களில் அல் அவுட்டானது.
Also Read: LIVE Cricket Score
இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now