3rd Test, Day 2: கேஎல் ராகுல் அரைசதம்; நிதானம் காட்டும் இந்திய அணி!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்துள்ளது.

Lord's Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்த நிலையில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 23 ரன்களிலும், ஸாக் கிரௌலி 18 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப் 44 ரன்களுக்கு, ஹாரி புரூக் 11 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ஜோ ரூட் - பென் ஸ்டோக்ஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இதில் ஜோ ரூட் தனது 37ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஜோ ரூட் 104 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ஜேமி ஸ்மித் - பிரைடன் கார்ஸ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்தனர். அதன்பின் ஜேமி ஸ்மித் 51 ரன்களுக்கும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், நிதிஷ் ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஜெய்ஸ்வால் 13 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கருண் நாயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் கருண் நாயர் 40 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொட்ர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில்லும் 16 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்டினார். அதனைத்தொட்ர்ந்து ராகுலுடன் இணைந்த ரிஷப் பந்த் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுபக்கம் நங்கூரம் போல் நின்று விளையாடிய கேஎல் ராகுல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பந்த் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 242 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now