
Lord's Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்த நிலையில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 23 ரன்களிலும், ஸாக் கிரௌலி 18 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப் 44 ரன்களுக்கு, ஹாரி புரூக் 11 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ஜோ ரூட் - பென் ஸ்டோக்ஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இதில் ஜோ ரூட் தனது 37ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஜோ ரூட் 104 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ஜேமி ஸ்மித் - பிரைடன் கார்ஸ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்தனர். அதன்பின் ஜேமி ஸ்மித் 51 ரன்களுக்கும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர்.