
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்துள்ளது. இதில், உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்தனர். இதன் மூலமாக ஆஸ்திரேலியா நல்ல ஸ்கோர் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 36 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஸ்டார்க் ஓவரில் பவுண்டரியும், சிக்சரும் விளாசிய ரோஹித் சர்மா எளிதாக சிக்சர் அடிக்க வேண்டிய பந்தில் குன்னெமன் ஓவரில் மார்னஸ் லபுஷேனிடம் கேட்ச் கொடுத்து விரக்தியாக வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து நங்கூரம் போன்று நின்று விளையாடிய புஜாரா 42 ரன்னில் வெளியேறினார். அதன்பின் விராட் கோலி களமிறங்கினார். அவரும் நிதானமாக ஆட வேண்டும் என்ற மைண்ட் செட்டில் வந்து ஒவ்வொரு ரன்னாக எடுத்து ஆடினார். ஒரு கட்டத்தில் 5ஆவது சதமடித்து சாதனை படைத்த ஷுப்மன் கில் 128 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஜடேஜா களமிறங்கினார். நிதானமாக ரன் சேர்த்த கோலி கடைசியாக 14 மாதங்களுக்குப் பிறகு தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.