
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடரை முடித்துள்ள இந்தியா அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா ஓய்வெடுப்பதால் சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இந்தியாவை கேப்டனாக வழி நடத்த உள்ளனர்.
அதை தொடர்ந்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. முன்னதாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதன் காரணமாக இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா கடந்த 2 வருடத்தில் எந்த ஐசிசி உலகக் கோப்பையையும் வெல்லவில்லை.
அதனால் அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவை வழி நடத்தப் போகும் கேப்டனை உருவாக்குவதற்கான வேலைகளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் தற்போதைய நிலைமையில் ஹர்திக் பாண்டியா டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த கேப்டனாக நியமிப்பதற்கான வேலைகளை ஏற்கனவே பிசிசிஐ கையில் எடுத்துள்ளது. அதே போல 2022இல் இங்கிலாந்துக்கு எதிராக ரத்து செய்யப்பட்ட 5ஆவது போட்டியில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா வருங்காலத்தில் டெஸ்ட் கேப்டனாக இருப்பார் என்று நம்பப்படுகிறது.