
கிரிக்கெட் உலகம் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி கோலாகலமாக தொடங்க இருக்கிறது. நடக்க இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடருக்கு நேற்று 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்கிறார். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருக்கிறார்.
நேற்று இறுதியாக அறிவிக்கப்பட்ட அணியில் ஒரே ஒரு மாற்றமாக அக்சர் படேலுக்கு பதிலாக வலது கை சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளே வந்திருக்கிறார். தற்பொழுது எல்லா பெட்டிகளும் இந்திய அணியில் டிக் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய மண்ணில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. இதற்குப் பிறகு இந்திய அணி எந்த ஒரு உலகக் கோப்பையையும் கைப்பற்றவில்லை.
அந்த உலகக் கோப்பையில் விளையாடிய இரண்டு வீரர்கள் மட்டுமே தற்போது 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் இருக்கிறார்கள். அவர்கள் விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்திய அணி ஆசியக் கோப்பை தொடருக்கு பின்பாக மிகவும் வலிமையான அணியாக தெரிகிறது. மேலும் உள்நாட்டில் தொடர் நடக்கின்ற காரணத்தினால், ரசிகர்கள் தாண்டி வீரர்களின் மனதிலும் நம்பிக்கை கோப்பையை வெல்ல அதிகமாக இருக்கிறது.