இந்திய அணியின் எதிர்காலம் அவரது கைகளில் மிகச் சிறப்பாக இருக்கிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பை தொடரில் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் எதிர்காலம் அவரது கைகளில் மிகச் சிறப்பாக இருக்கிறது - ஏபிடி வில்லியர்ஸ்! (Image Source: Google)
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐசிசியின் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் 40க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. அதோடு இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது எந்த அணி? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் எதிர்வரும் இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடிக்கப்போகும் வீரர் யார்? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த உலகக் கோப்பை தொடரில் சிலர் ஸ்டீவ் ஸ்மித் அதிக ரன்களை குவிப்பார் என்று நினைக்கலாம். ஏனெனில் அவருடைய பேட்டிங் டெக்னிக் சற்று வித்தியாசமானது.
மற்றவர்களை காட்டிலும் கிரீசில் அதிகளவு அவர் நகர்ந்து விளையாடுபவர். அதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் அவருக்கு எதிராக சிரமப்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் பெரிய அளவில் பவுலர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதில்லை. அதேவேளையில் இந்திய வீரரான ஷுப்மன் கில் மிகவும் நேர்த்தியான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். அவருடைய பேட்டிங் டெக்னிக் சிம்பிளாக இருந்தாலும் அவர் அந்த டெக்னிக்கை வைத்தே பலமான வீரராக மாறி வருகிறார்.
அதிலும் குறிப்பாக அவர் போட்டியின் போது அதிகமாக எதையும் முயற்சி செய்வதில்லை. தன்னுடைய பலம் என்ன என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் விளையாடுகிறார். மேலும் போட்டியின் எந்த சூழ்நிலையிலும் அவரால் ஆட்டத்தை மாற்றி அமைக்க முடிகிறது. அதோடு நேரம் செல்ல செல்ல அவருடைய அதிரடியை அவர் தொடர்வதால் பவுலர்கள் அவருக்கு எதிராக அழுத்தத்தை உணர்கிறார்கள். ஐபிஎல் தொடரின் போது நான் அவரது பேட்டிங்கை பார்த்துள்ளேன்.
குறிப்பாக ஃபுல் ஷாட்டுகளை அவர் மிகச் சிறப்பாக விளையாடுகிறார். அவருடைய கைகளின் வேகமும் மிகச் சிறப்பாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை தற்போதே அவர் சிறந்த வீரராக மாறி வருகிறார். மிகவும் இளம் வயது வீரரான அவர் இப்போதே நல்ல முதிர்ச்சியுடன் விளையாடி வருகிறார். என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பை தொடரில் அவரே அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இருப்பார் என்று கருதுகிறேன். மேலும் இந்திய அணியின் எதிர்காலம் அவரது கைகளில் மிகச் சிறப்பாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News