
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டமானது கடந்த ஜூன் 24ஆம் தேதி செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களைச் சேர்த்து. இதில் ரோஹித் சர்மா 92 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் ஆகியோரைத் தவிர்த்து மற்ற எந்த வீரரும் பெரிதளவில் சோபிக்க தவறியதால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது.
இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது சுப்பர் 8 சுற்றுடன் தொடரிலிருந்தும் வெளியேறியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக் குற்றச்சாட்டை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் 15ஆவது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். 15ஆவது ஓவரிலிருந்தே பந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தொடங்கியதால் நடுவர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும்.