
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட், இந்தூரில் மார்ச் 1 அன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2அஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.
டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர், இதுவரை நடைபெற்ற இரு டெஸ்டுகளிலும் விளையாடவில்லை. இந்நிலையில் காயம் போன்ற காரணங்களுக்காக அல்லாமல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து உடனடியாக தனது நாட்டுக்குத் திரும்பவுள்ளார் அகர்.