
இந்திய அணிக்கு திடீரென்று எல்லா விஷயங்களும் மிக நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இந்திய அணிக்கு பெரிய பிரச்சினையாக இருந்ததே, அணி நிர்வாகம் எடுக்கக்கூடிய முடிவுகள் தொடர்ச்சியாகத் தவறாகச் சென்றதுதான். திறமையான வீரர்கள் அணியில் இருந்த பொழுதும், பரிசோதனை முயற்சிகள் நல்ல முடிவுகளை தராத காரணத்தினால், அணியின் நம்பிக்கை வெகுவாக குறைந்திருந்தது.
இந்திய அணி நம்பிக்கை மற்றும் ஊக்கம் பெறுவதற்கு ஏதாவது ஒன்று தேவைப்பட்டது. நடப்பு ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது சுற்றுப்போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்திய அணிக்கு என்ன தேவையோ? அதை இரு மடங்கு கொடுத்திருக்கிறது. மிகக்குறிப்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டரில் காயத்தில் இருந்து திரும்பி வந்த கேஎல்.ராகுல் எப்படி விளையாடுவார்? அவருடைய உடல் தகுதி எப்படி இருக்கிறது? இன்று அவர் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் இருந்தது.
கேஎல் ராகுல் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து, மேலும் விக்கெட் கீப்பிங் செய்து முற்றுப்புள்ளி வைத்தார். இது மட்டும் இல்லாமல், அவர் அடுத்த நாளே இலங்கைக்கு எதிரான போட்டியில் மிக முக்கியமான 39 ரன்கள் எடுத்தார். மேலும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டதோடு, குல்தீப் யாதவுக்கு சரியான ஆலோசனை கூறி, சதிரா விக்கெட்டை கைப்பற்ற உதவி செய்தார்.