
இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட், இந்தூரில் மார்ச் 1 அன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.
டெல்லி டெஸ்டில் 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வந்த ஆஸ்திரேலியா, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பகுதியிலேயே 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பேட்டிங் வரிசையை, இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முற்றிலுமாகச் சிதைத்தார். அவருக்கு அஸ்வினும் துணை நிற்க, சுழலியே சுருண்டது ஆஸ்திரேலியா.