
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எல்லா அணிகளையும் அச்சுறுத்தக்கூடிய அணியாக இந்திய அணி இருந்து வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக, டி20 கிரிக்கெட்டின் தாக்கத்தின் காரணமாக, எல்லா அணிகளுமே அதிகப்படியான ஆல்ரவுண்டர்களை கொண்டு, பேட்டிங் நீளத்தை அதிகரிக்க முயற்சி செய்தன.
இதன் காரணமாக இப்படியான முயற்சிகள் ஈடுபட்ட எல்லா அணியின் பௌலிங் யூனிட்டும் பலவீனமாக மாறியது. மேலும் ஆல்ரவுண்டர்கள் என்பதால் அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை அதற்கேற்ற வகையில் விளையாடும் திறமை இல்லாதவர்களாகவும் இருந்தார்கள். இப்படியான ஒரு அணியை கொண்டு வந்து நடப்பு சாம்பியன் இங்கிலாந்து பெரிய அடி வாங்கியது. உலகக்கோப்பை தொடர் தொடங்கி சிறிது காலத்திலேயே மற்ற அணிகள் இதை புரிந்து கொள்ள ஆரம்பித்தன.
அதே சமயத்தில் இந்திய அணி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர்கள் என முயற்சி செய்தது. இதன் காரணமாகத்தான் இந்த இரண்டு அணிகளும் தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றன. தற்பொழுது ஐந்து முழுமையான பந்துவீச்சாளர்கள் இந்திய விளையாடும் அணியில் இடம் பெறுகிறார்கள். ஆறாவது பந்துவீச்சாளருக்கான இடம் யாருக்கு என்பது தற்பொழுது வரை ஒரு பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.