
ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி போன்றவை நீண்ட காலத்திற்கு ஒருமுறை நடைபெறும் என்பதால், ஒரு ஐசிசி தொடர் முடிந்த உடனே சீனியர்களை கழற்றிவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் ஒரு அணியால் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியும். ஆகையால், ஷிகர் தவன், இஷாந்த் ஷர்மா போன்ற சீனியர்கள் சமீபத்தில் காரணமில்லாமல் கழற்றிவிடப்பட்டனர்.
இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்துள்ள நிலையில், அடுத்து 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகும் வகையில், இளம் வீரர்களை டெஸ்ட் அணிக்குள் கொண்டு வருவது நிச்சயம் அவசியமான ஒன்றாகும். ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா, ரஹானே போன்றவர்கள் அடுத்த இரண்டு வருடங்கள் முடிவுவரை விளையாடுவார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
ஆகையால், அவர்களுக்கு மாற்றாக இப்போதே இளம் வீரர்களை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது. புஜாராவுக்கு மாற்றாக ஹனுமா விஹாரி, ரஹானேவுக்கு மாற்றாக ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இருக்கிறார்கள். ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோருக்குத்தான் சரியான மாற்று வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இல்லை.