
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் அத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன்படி வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதன்காரணமாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் இங்கிலாந்து அணியானது இத்தொடருக்கான 15 பேர் அடங்கிய அணியை இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் தொடர்வார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜானி பேர்ஸ்டோவ், பில் சால்ட், வில் ஜேக்ஸ் ஆகியோரும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்த அதிவேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக தனது கம்பேக்கை கொடுக்கவுள்ளார்.