
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்போடு இருந்த இந்திய ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் வருத்தத்துடன் இந்திய அணியின் தோல்வி குறித்துப் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பையின் மீது கால் வைத்தபடி வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் பெரும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தமிழ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியா வெற்றியைக் கொண்டாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதைக் கண்ட பலரும், "இந்திய வம்சாவளியாக இருந்து கொண்டு இந்தியாவின் தோல்வியைக் கொண்டாடுகிறார் வினி" என்று விமர்சித்து வருகின்றனர்.