
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இறுதியில் இந்திய மண்ணில் நடைபெறவுள்ளது. இதனால் 2011ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி கோப்பையை வெல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திய அணி கடைசியாக கடந்த 2013ம் ஆண்டு ஐசிசி கோப்பையை வென்றது. அதன்பின்னர் 10 ஆண்டுகளாக எப்படியாவது வென்றுவிட வேண்டும் என போராடி வருகிறது.
ஆனால் அதற்குள் பல பின்னடைவுகள் உருவாகியுள்ளன. இந்திய அணியில் உள்ள பல நட்சத்திர வீரர்கள் உலகக்கோப்பையில் விளையாடுவார்களா என்பதிலேயே சந்தேகம் நிலவி வருகிறது. இந்தியாவின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி தற்போது ஓய்வில் உள்ளார். அவர் 2023ம் ஆண்டு முழுக்க விளையாட மாட்டார் எனத்தெரிகிறது. இதே போல பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா எப்போது வருவார் என்பதே இன்னும் தெரியாமல் இருந்து வருகிறது.
இதற்கு இடையில் தான் மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். அவர் வரும் வரையில் சூர்யகுமார் யாதவ் தான் அவரின் இடத்தை நிரப்பவுள்ளார். ஆனால் அவரும் டி20 கிரிக்கெட்டில் கலக்கியதை போல ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிதாக சோபிக்காமல் இருந்து வருகிறார். இதனால் எப்படி இந்திய அணி சமாளிக்கப்போகிறது என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.