
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 25ஆம் தேதி ஹைத்ராபாத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 190 ரன்களுக்கு மேல் இந்திய அணி முன்னிலைப் பெற்ற நிலையிலும், இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றுள்ளது அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் டெஸ்ட் தொடரில் சோபிக்க முடியாமல் தவித்து வருகிறார். அதிலும் அவர் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்ஸில் 18, 06, 29, 02,26, 36, 10, 23 மற்றும் 0 என்ற அடிப்படையிலேயே ரன்களைச் சேர்த்துள்ளார்.
மேலும் ஆரம்பத்தில் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடி வந்த அவர், யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வருகைக்கு பின் மூன்றாம் வரிசையில் விளையாடி வருகிறார். ஆனால் அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்கி இதுவரை சொல்லிக்கொள்ளும் அளவில் எந்தவொரு இன்னிங்ஸையும் விளையாடாததால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது மட்டுமின்றி, அவரை அணியில் சேர்க்க வேண்டுமே என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.