
நேற்று நாக்பூரில் தொடங்கி நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி ஆடுகளம் குறித்து போட்டி துவங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய தரப்பில் இருந்து எக்கச்சக்க குற்றச்சாட்டுகள் எழும்பி இருந்தது. போட்டிக்கு முந்தைய நாள் ஆடுகளத்தின் புகைப்படங்கள் வெளியாக, ஆஸ்திரேலிய இடதுகை பேட்ஸ்மேன்களை குறி வைத்து ஆடுகளம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டுகள் வைத்ததோடு இதில் ஐசிசி தலையிட வேண்டுமென்ற அளவுக்கு போனார்கள்.
நேற்று டாஸ் வென்று ஆஸ்திரேலியா விளையாடி 177 ரன்களில் அடங்கிவிட்டது. அவர்கள் விளையாடிய பொழுது ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பது போல் தெரிந்தது. ஆனால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விளையாடிய பொழுது அப்படி எதுவுமே தெரியவில்லை. மிகச் சிறப்பாக விளையாடி 212 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 120 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் இந்திய அணியின் இடதுகை வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் அரை சதங்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் அசத்தியிருக்கிறார்கள்.
தற்பொழுது இந்திய அணி நிர்வாகம் மற்றும் ஆடுகளத்தின் மீதான ஆஸ்திரேலியர்கள் மற்றும் பிறரின் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். ரோஹித் சர்மாவின் ஆட்டம் பற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான், “இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை எப்படி ஆட வேண்டும்? சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி ஆட வேண்டும்? என்று ரோஹித் சர்மா மற்றவர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார். அவர் ஒரு விதிவிலக்கான டெஸ்ட் நாக் கண்காட்சியை நமக்கு வழங்கி இருக்கிறார்.