
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025க்கு முன்னதாக யுபி வாரியர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா மற்றும் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஷஸ் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஹீலி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு இந்தாண்டு இறுதியில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரும் நடைபெற இருப்பதால் அதற்குள் தயாராகும் விதமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .