நாங்கள் இன்னும் சரியாக விளையாடவில்லை - அக்ஸர் படேல்!
நாங்கள் களத்தில் சிறப்பாக செயல்படுகிறோம், ஆனால் கேட்சுகளையும் தவறவிடுகிறோம் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக விளையாடிய கேஎல் ராகுல் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் உதவியதன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல், “தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெறுவது மிகவும் நல்லது. வெற்றி பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, நாங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். அதுதான் எங்களுடைய திட்டமாக உள்ளது, மேலும் இதுவரை அது வெற்றிகரமாகவும் உள்ளது. அணியில் தற்போது அனைத்து விசயங்களும் நன்றாக நடந்து வருகிறது.
ஆனால் ஒரு கேப்டனாக கூற வேண்டும் எனில், நாங்கள் களத்தில் சிறப்பாக செயல்படுகிறோம், ஆனால் கேட்சுகளையும் தவறவிடுகிறோம் என்று நான் கூறுவேன். அது ஆட்டத்தின் போக்கை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். மேற்கொண்டு என் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே நான் இந்த ஆட்டத்தில் ஒரு ஓவர் மட்டும் பந்துவீசினேன். நான் பந்து வீச விரும்பினேன், ஆனால் அது ஒரு நீண்ட போட்டி என்பதால் அதை ஆபத்தில் ஆழ்த்த விரும்பவில்லை.
எங்கள் சுழற்பந்து வீச்சாளர்களும் பந்துவீச்சுப் பிரிவும் அருமையாக இருந்தது. எல்லோரும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, பேட்டிங் மற்றும் பந்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். அனைத்து பந்து வீச்சாளர்களும் சரியாக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஒரு கேப்டனாக, நாங்கள் இன்னும் ஒரு சரியான போட்டியை விளையாடவில்லை என்று நினைக்கிறேன். நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், ஆனால் ஐபிஎல் ஒரு நீண்ட தொடராகும்” என்று தெரிவித்துள்ளார்.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்க வீரர் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 77 ரன்களைச் சேர்த்தார். மேற்கொண்டு அபிஷேக் போரேல் 33 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டர்கள் மீண்டும் சோபிக்க தவறினர். இதில் விஜய் சங்க 69 ரன்களையும், மகேந்திர சிங் தோனி 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொதப்ப, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தும் அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now