
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அணியின் பயிற்சியாளர்களை மற்றுதல், புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், வீரர்களை ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். இதனால் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம்பிடிபார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரை மும்பை இந்தியன்ஸ் அணியானது தக்கவைக்கும் என்றும் சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ரோஹித் சர்மா எதிர்வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் தொடர்வாரா என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.