
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில், இந்திய அணியில் ரோஹித் சர்மா மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்து வருகிறார். முதலில் ஆடுகளம் பெரிய அளவில் பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை. அந்த நிலையிலும் இந்திய அணி வீரர்கள் மோசமான ஷாட் தேர்வு மூலம் தங்களது விக்கெட்டை பறி கொடுத்தார்கள்.
இதில் கேஎல் ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழக்க, புஜாரா ரஞ்சி கிரிக்கெட் எல்லாம் விளையாடி நல்ல ஃபார்மில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேவையில்லாமல் ஸ்வீப் ஷாட் விளையாடி தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.விராட் கோலியும் சொற்ப ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.