Advertisement
Advertisement
Advertisement

IND vs AUS, 3rd ODI: இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan March 22, 2023 • 22:17 PM
IND vs AUS, 3rd ODI: Australia clinch the decider in Chennai to bag the ODI series 2-1!
IND vs AUS, 3rd ODI: Australia clinch the decider in Chennai to bag the ODI series 2-1! (Image Source: Google)
Advertisement

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. இதற்கடுத்து மும்பையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் ஆகியோர் வெளியில் அமர வைக்கப்பட்டு டேவிட் வார்னர் மற்றும் ஆஸ்டன் அகர் இருவரும் உள்ளே கொண்டுவரப்பட்டார்கள். இந்திய அணி தரப்பில் குல்திப் யாதவ் அணிக்குள் வர கொண்டுவரப்பட்டார்.

Trending


டேவிட் வார்னர் அணிக்குள் வந்தாலும் கடந்த ஆட்டங்களைப் போல டிராவீஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஷ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். கடந்த ஆட்டங்களைப் போலவே இருவரும் அதிரடியில் ஈடுபட அவர்களின் ஆஸ்திரேலியா அணி விக்கெட்டை இழக்காமல் 50 ரன்கள் தாண்டி வெற்றிகரமாக பயணித்தது.

இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா பதினோராவது ஓவருக்கு ஹர்திக் பாண்டியாவை அழைத்துப் பந்தை தர, இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் டிராவிஸ் ஹெட்டை வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் விக்கெட்டை ரன் கணக்கை துவங்குவதற்கு முன்பே வீழ்த்தி ஆஸ்திரேலியா அணிக்கு டபுள் செக் வைத்தார்.

மேற்கொண்டு பந்துவீச்சை தொடர்ந்த ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய பின்னடைவை உருவாக்கும் விதமாக மிகச் சிறப்பாக விளையாடி வந்த மிட்சல் மார்சை கிளீன் போல்ட் செய்தார். ஹெட் மற்றும் மார்ஷ் துவக்க ஜோடி முதல் விக்கட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது. ஹெட் 33 ரன்களும், மார்ஷ் 47 ரன்களும் எடுத்தார்கள்.

இதற்கு அடுத்து களம் கண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சுமாராக தொடர்ச்சியாக ரன் பங்களிப்பை தந்தார்கள். டேவிட் வார்னர் 23, லபுசாக்னே 28, அலக்ஸ் ஹேரி 38, மார்கஸ் ஸ்டாய்னிஷ் 25, சீன் அபாட் 26, ஆஸ்டன் அகர் 17 என சீரான ரன் பங்களிப்பை தந்தார்கள். ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் 269 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டைகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆரம்ப முதலே இருவரும் அதிரடியாக விளையாட இந்திய அணி எளிமையாக இலக்கை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தகர்தெரியும் விதமாக கேப்டன் ரோஹித் சர்மா 30 ரன்களிலும், ஷுப்மன் கில் 37 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - கேஎல் ராகுல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 32 ரன்களிலும், அடுத்து வந்த அக்ஸர் படேல் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மறுமுனையில் விராட் கோலி தனது 65ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 54 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தார். 

முன்னதாக நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் ஹர்திக் பாண்டியா - ரவீந்திர ஜடேஜா இணையும் ஓரளவு ரன்களைச் சேர்க்க அணியின் வெற்றிவாய்ப்பும் இருந்தது. ஆனால் 44 ரன்களில் ஹர்திக் பாண்டியே தேவையிலாம் தூக்கி அடித்து ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜாவும் 18 ரன்களில் நடையைக் கட்டினார். 

இறுதியில் வந்த வீரர்களும் தங்களால் முடிந்த ரன்களைச் சேர்த்த போதிலும் இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் அகர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியும் அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஆடம் ஸாம்பா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மிட்செல் மார்ஷ் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement