
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்பின், விசாகப்பட்டினத்தில் நடந்த 2ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
வார்னர் அணிக்கு திரும்பியும், அவரை நடுவரிசையில் கேப்டன் ஸ்மித் களமிறக்கினார். இதனால் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.