Advertisement
Advertisement

IND vs AUS, 3rd ODI: பேட்டிங்கில் விட்டதை பவுலிங்கில் பிடித்த மேக்ஸ்வெல்; ஆஸி ஆறுதல் வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 27, 2023 • 21:38 PM
IND vs AUS, 3rd ODI: பேட்டிங்கில் விட்டதை பவுலிங்கில் பிடித்த மேக்ஸ்வெல்; ஆஸி ஆறுதல் வெற்றி!
IND vs AUS, 3rd ODI: பேட்டிங்கில் விட்டதை பவுலிங்கில் பிடித்த மேக்ஸ்வெல்; ஆஸி ஆறுதல் வெற்றி! (Image Source: Google)
Advertisement

உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. இப்போட்டியிலும் இந்திய அணி  வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

Trending


அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரது ஓவர்களில் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வர்னர் 32 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 56 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் - ஸ்டீவ் ஸ்மித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர்.

அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 96 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 74 ரன்களை எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இருப்பினும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்னஸ் லபுஷாக்னே தனது அரைசதத்தை பதிவுசெய்ததுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினார். அதன்பின் 72 ரன்கள் எடுத்திருந்த மார்னஸ் லபுஷாக்னேவும் தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - வாஷிங்டன் சுந்தர்  இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வாஷிங்டன் சுந்தர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் ரோஹித் சர்மா பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி 31 பந்துகளில் தனது அரைசத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  

அதன்பின் இணைந்த ரோஹித் - விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சதமடிபார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா 5 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 81 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த விராட் கோலியும் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 56 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

இதனைத்தொடர்ந்து வந்த கேஎல் ராகுல் 18 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் 48 ரன்களில் கிளென் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இன்றைய போட்டியில் பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்காத கிளென் மேக்ஸ்வேல், ரோஹித் சர்மா, விராட் கோலி, வாஷிங்டன் சுந்தர், ஸ்ரேயாஸ் ஐயர் என முக்கிய வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றி போட்டியை ஆஸ்திரேலிய அணி பக்கம் திரும்பினார்.  

அதன்பின் ரவீந்திர ஜடேஜா ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுபக்கம் குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோரும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரவீந்திர ஜடேஜாவும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கிளென் மேக்ஸ்வெல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், ஒருநாள் தொடரிலும் ஒயிட்வாஷை தவிர்த்தது. அதேசமயம் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement