
இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ள்து. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது.
இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 22ஆம் தேதி தொடங்கும் நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது பிப்ரவரி 06ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. மேலும் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் மற்றொரு நட்சத்திர வீரரான ஜோ ரூட்டிற்கு மீண்டும் இங்கிலாந்து ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து ஜோஃப்ரா ஆர்ச்சார், காயத்தில் இருந்து மீண்டுள்ள மார்க் வுட், கஸ் அட்கின்சன் பிரைடன் கார்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.