
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்று (அக்டோபர் 16) தொடங்கியது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது.
இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் நிகழ்வானது நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பந்துவீச அழைத்தார். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கத்திலேயே நியூசிலாந்தின் பந்துவீச்சை கணிக்கமுடியாமல் ரன்களைச் சேர்க்க தடுமாறினர். அதன்பின் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரன்கள் ஏதுமின்றி வில்லியம் ஓ ரூர்க்கின் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சர்ஃப்ராஸ் கானும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, இந்திய அணி 10 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரிஷப் பந்த் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.