
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (நவம்பர் 1) மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார்.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர், டிம் சௌதீ நீக்கப்பட்டு இஷ் சோதி மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டு முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் டாம் லேதமுடன் இணைந்த வில் யங் பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரையும் உயர்த்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.