
ஒருநாள் மற்றும் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளின் வருகையால் பெரும்பாலும் ட்ராவில் முடிந்த டெஸ்ட் போட்டிகளின் மவுசு ரசிகர்களிடம் குறைந்து வந்தன. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்பிக்க நினைத்த ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 போலவே கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் பிரத்தியேக உலக கோப்பையை அறிமுகப்படுத்தியது. அதனால் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தால் கோப்பை கிடையாது மாறாக 2 வருடங்களாக லீக் சுற்றில் விளையாடி புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து இறுதிப்போட்டியில் வென்றால் தான் சாம்பியன் பட்டம் கொடுக்கப்படும் என்ற நிலைமை உருவானது.
அதன் காரணமாக சமீபத்தில் இங்கிலாந்தை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது போன்ற நிறைய போட்டிகள் பரபரப்பாக நடைபெறுவதால் தற்போது டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சரித்திர வெற்றி பெற்று லீக் சுற்றில் சக்கை போடு போட்டு புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா 2021ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் வழக்கம் போல சொதப்பி நியூஸிலாந்திடம் தோற்றது.
இருப்பினும் மனம் தளராமல் அடுத்த தொடரில் போராடிய இந்தியாவுக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தலைமையில் அசத்தி புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்து தொடர்ந்து 2ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் மீண்டும் அதே இங்கிலாந்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்தது.