
ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. இத்தொடருக்காக ஷுப்மன் கில் தலைமையிலானான 18 பேர் அடங்கிய இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில வெற்றிடங்கள் உருவாகியுள்ளன. மேலும் இங்கிலாந்து தொடரில் அந்த இடங்களை நிரப்பக்கூடிய வீரர்கள் யார் என்ற கேள்விகளும் அதிகரித்திருந்தது. அதற்கேற்றவகையில் சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து உள்ளூர் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் மற்றும் ஷர்தூல் தாக்கூர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி நேற்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்தது. இதில் அணியின் தலைமை பயிற்சியாளர், புதிய கேப்டன் ஷுப்மன் கில், அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் என ஒட்டுமொத்த அணியும் இங்கிலாந்து சென்றடைந்தனர்.