சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தன் பெயரில் பதிவுசெய்துள்ளவர் ரோஹித் சர்மா. அதிலும் அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் போன அவர் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசைத்தியுள்ளார். அந்தவகையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் ஒன்றை ரோஹித் சர்மா எட்டியுள்ளார்.
அதன்படி, நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்துள்ளது. இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இப்போட்டியில் 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 131 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா 3 சிக்சர்களை விளாசியதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் 78 சிக்சர்களை அடித்து இரண்டாம் இடத்தில் இருந்தார்.