
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் 16 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 20 அணிகள் பங்கேற்கவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது. அதேபோல் குரூப் ஏ பிரிவில் இந்திய அணியுடன் சேர்ந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி ஏறத்தாள உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் ஒருசில வீரர்களின் இடம் மட்டும் கேள்விக்குறியாகவே உள்ளது. அதிலும் விக்கெட் கீப்பருக்கான தேர்வு மிகப்பெரும் சவலாக மாறியுள்ளது. ஏனெனில் விக்கெட் கீப்பருக்கான தேர்வில் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, கேஎல் ராகுல், இஷான் கிஷான் ஆகியோருடன் சேர்த்து காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்தும் இருப்பதால், தேர்வாளர்கள் பெரும் குழப்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.