
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கி 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஆஸ்திரேலியாவின் லபுசாக்னே அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியா டாப் பேட்ஸ்மேன்களை தனது சுழலில் சுருட்டி எடுத்துள்ளார். 22 ஓவர்கள் வீசிய ஜடேஜா 8 மெய்டன் ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் சதம் மற்றும் ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகியோரது அரைசதங்கள் மூலம் 400 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான டாட் மர்ஃபி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.