
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக செயல்படுவாரா, குல்தீப் யாதவிற்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா, கருண் நாயர் டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுப்பாரா என பல்வேறு கேள்விகளுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில் இந்த முக்கியமான சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, இந்திய அணி முகாமில் இருந்து ஒரு பெரிய செய்தி வந்துள்ளது.சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு அனைத்து போட்டிகளுக்கும் தயாராக இருக்கும் வீரருக்கு துணைக்கேப்டன் பதவியை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.