
உலகக் கிரிக்கெட்டில் மிக முக்கியமான தொடராக பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூரில் துவங்க இருக்கும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி அமைந்திருக்கிறது. இந்தத் தொடர் இந்திய அணிக்கு நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு மிக மிக முக்கியமான ஒரு தொடர் ஆகும்.
அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி இந்த ஓட்டத்தில் முன்னணியில் இருந்தாலும், தங்கள் நாட்டில் வைத்து பார்டர் கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணியிடம் இருமுறை தோல்வியடைந்து இருப்பதால் அதற்கு பதிலடி தர வேண்டி, மேலும் இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் ஆஸ்திரேலியாவுக்கும் இது மிக முக்கியமான தொடராக அமைந்திருக்கிறது!
இப்படியான காரணங்களால் இந்தியாவில் பயிற்சி ஆட்டங்களை மறுத்துவிட்டு பெங்களூர் ஆலூர் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தை பெற்று பயிற்சி செய்து வருகிறது. இதில் ஒரு சிறப்பு அம்சமாக இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை போலவே வீசும் பரோடாவை சேர்ந்த 21 வயது சுழற் பந்துவீச்சாளர் மகேஷ் பித்தியாவை வரவழைத்து பயிற்சி செய்து கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா அணி.