
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்த தொடர் கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி அந்தளவிற்கு விளியாடவில்லை. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவிடம் மண்டியிட்டு சரணடைந்து படுதோல்விகளை அடைந்து, இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இப்போது, அந்த அணி ஒயிட்வாஷ் ஆகாமல் தடுக்க போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் ஜெயிக்க ஸ்பின் தான் முக்கியமான அஸ்திரம் என்பதை உணர்ந்து நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன், அஷ்டான் அகர் என 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய அணி, முதல் டெஸ்ட்டில் அணி தேர்வில் தவறிழைத்துவிட்டது. 2வது டெஸ்ட்டில் அந்த அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஸ்பின்னை பயன்படுத்துவதில் ஓரளவிற்கு தேறிய ஆஸ்திரேலிய அணி, இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் கோட்டைவிட்டது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வியூகங்கள், ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம், அணி தேர்வு ஆகியவை கடும் விமர்சனத்துக்குள்ளானது. முன்னாள் வீரர்கள் பலரும் ஆஸ்திரேலிய அணியை விமர்சித்த நிலையில், கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணி நன்றாக ஃபைட் செய்ததாக ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார்.