
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயானமுதல் டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஷான் மசூத், அகா சல்மான் மற்றும் அப்துல்லா ஷஃபிக் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 151 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 102 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் 104 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடர்க்க வீரரான ஸாக் கிரௌலி 78 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பென் டக்கெட்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு, 84 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்ததுடன் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.