
நேற்று ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. உலகக் கோப்பைக்கு நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கும் விதமாக, முதல் போட்டியில் பலமான இங்கிலாந்து அணியை மிக எளிதாக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்றது சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை ஐந்து முறை வென்ற ஆஸ்திரேலிய அணியை சென்னை சேப்பாக்கத்தில் அக்டோபர் 8ஆம் தேதி எதிர்கொள்கிறது. நடப்பு உலகக் கோப்பை பயணம் இந்திய அணிக்கு தமிழகத்தில் இருந்து துவங்குகிறது. இதற்கு முன்பாக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்சமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி இருந்தது.
இப்போட்டிக்கு இன்னும் ஒரு நாள் இடையில் இருக்கும் நேரத்தில் திடீரென இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இது கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. இந்த நிலையில் காலையில் இந்த விஷயம் தொடர்பாக காலையில் தெரிவித்த இந்திய அணி நிர்வாகம், முடிவு என்னவென்று மாலை 6:00 மணிக்கு தெரிவிப்பதாக கூறியிருந்தது.