
இந்திய கிரிக்கெட் தாண்டி உலக கிரிக்கெட்டில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய வீரர்களில் இந்திய அணியில் தற்பொழுது விளையாடி வரும் விராட் கோலியும் ஒருவர். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் வேகம் என்பது இதுவரை கிரிக்கெட் உலகம் காணாத ஒன்று. ஒருநாள் கிரிக்கெட்டின் அடையாள வீரராக பார்க்கப்படுகிற சச்சின் சாதனைகளை சீக்கிரத்தில் கடக்க கூடிய இடத்தில் விராட் கோலி இருக்கிறார்.
இப்படிப்பட்ட விராட் கோலிக்கு கடந்த ஒரு ஆயிரம் நாள்கள் மிக சோதனையான காலகட்டமாகவே பேட்டிங்கில் இருந்தது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் காலகட்டத்திற்கு மேல் அவரிடமிருந்து சதங்கள் வரவில்லை. பிறகு அரை சதங்களும் நின்றது. அதற்கு அடுத்து கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் அவர் சாதாரணமாக ரன்கள் எடுப்பதே பெரிய விஷயமாக போனது. அந்தத் தொடரில் மட்டும் தான் சந்தித்த முதல் பந்திலேயே மூன்று முறை ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
தற்பொழுது இதற்கான காரணங்கள் குறித்து இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் கூறும் பொழுது, “ஒரு நாள் கிரிக்கெட் என்பது அவருக்குள் இருந்த கிரிக்கெட் மேதையை வெளியே கொண்டு வந்த ஒரு கிரிக்கெட் வடிவம். பலர் இந்த விஷயத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள். கோவிட் தொற்றுக்குப் பிறகு நாங்கள் அதிக ஒரு நாள் போட்டிகள் விளையாடவில்லை. நாங்கள் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் தான் அதிகம் விளையாடினோம். மிக நீண்ட காலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிகம் உத்வேகத்தை எடுத்துக் கொள்ளக் கூடிய வீரராக விராட் கோலி இருந்திருக்கிறார்.