
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37ஆவது லீக் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 243 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் தொடர்ச்சியாக தங்களது எட்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைத்தது.
அடுத்ததாக இந்த உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாட இருக்கும் இந்திய அணி அரையிறுதி போட்டியில் எந்த அணியுடன் விளையாட இருக்கிறது என்று குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதுமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் தனது பிறந்த நாளில் 49ஆவது ஒருநாள் சதத்தை விளாசி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு பலரது மத்தியில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.