
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் சொந்த மண்ணில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இந்தியா லீக் மற்றும் அரையிறுதி என தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து உச்சகட்ட செயற்பாடுகளை வெளிப்படுத்திய போதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்து கோப்பையை நழுவ விட்டது.
அந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சீனியர் வீரர்கள் என்பதற்கு அடையாளமாக மிகச் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக ரோகித் சர்மா தன்னுடைய சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் இறுதிப்போட்டி உட்பட பெரும்பாலான போட்டிகளில் ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கி இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து வெற்றிகளில் பங்காற்றினார்.
இருப்பினும் கோப்பையை வெல்ல முடியாததால் களத்திலேயே கண்ணீர் விட்ட அவர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஓய்வெடுத்து வருகிறார். இதை தொடர்ந்து நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வெடுக்கும் அவர் டெஸ்ட் தொடரில் மட்டுமே கேப்டனாக செயல்பட உள்ளார். முன்னதாக 2022 டி20 உலகக் கோப்பையில் பேட்டிங்கில் சுமாராகவே விளையாடிய ரோஹித் சர்மா இந்தியாவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தார்.