உலகக்கோப்பை தொடரில் அணியை வழிநடத்துவது ரோஹித் சர்மா தான் - ஜெய் ஷா!
டி20 உலகக்கோப்பை தொடரில் அணியை கேப்டனாக ரோஹித் சர்மா வழிநடத்துவார் என்றும், துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிசெய்துள்ளார்.
![Bharathi Kannan Bharathi Kannan](https://img.cricketnmore.com/uploads/2021/03/bk.jpg)
![Rohit Sharma To Captain India At T20 World Cup - Jay shah! உலகக்கோப்பை தொடரில் அணியை வழிநடத்துவது ரோஹித் சர்மா தான் - ஜெய் ஷா!](https://img.cricketnmore.com/uploads/2024/02/Rohit-Sharma-lg-(1)-lg.jpg)
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் இத்தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா - கனாடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதேசமயம் இந்திய அணி இடம்பிடித்துள்ள குழுவில், பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த ஓராண்டு காலமாக இந்திய டி20 அணியைப் பொறுத்தவரையில் பல்வேறு வீரர்கள் பரிசோதனை முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
Trending
மேலும் இத்தொடருக்கான கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்திருந்தன. ஏனெனில் கடந்த 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா, ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். அதேசமயம் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் டி20 அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்ததால் ஹர்திக் பாண்டியா தான் டி20 அணியின் கேப்டனாக பார்க்கப்பட்டார்.
இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்பது குறித்து டாக் ஒரு பக்கம் நிலவி வந்தது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் வழிநடத்தி வந்தார். அவர் தலைமையிலான மும்பை அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது. இந்நிலையில் தான் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் மும்பை அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என அந்த அணி அறிவித்தது. அந்த அணியின் பயிற்சியாளர் பவுச்சர் அதனை ஆதரித்து பேசி இருந்தார்.
இதனால் டி20 உலகக்கோப்பை தொடரிலும் ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் என்ற பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில் நேற்றைய தினம் ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் அணியை கேப்டனாக ரோஹித் சர்மா வழிநடத்துவார் என்றும், துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிசெய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நாம் இழந்தோம். ஆனால், தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று ரசிகர்களின் நெஞ்சங்களை வென்றோம். நடப்பு ஆண்டில் பார்படோஸில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும். உலகக் கோப்பை தொடருக்கான துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now