
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் அடிப்படையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் புள்ளிப்பட்டியளின் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. அதேசமயம் பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதி வாய்ப்புகாக போராடி வருகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் ஹெம்ந்தா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தது.