
வங்கதேசம் - நேபாள் அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று செயின் வின்செண்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 17 ரன்களை எடுத்திருந்தார். நேபாள் அணி தரப்பில் சோம்பால் கமி, தீபேந்திர சிங் ஐரி, கேப்டன் ரோஹித் பௌடல், சந்தீப் லமீச்சானே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் குஷால் புர்டெல், அனில் ஷா, ஆசிஃப் ஷேக், ரோஹித் பௌடல், சந்தீப் ஜோரா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் அணிக்கு நம்பிக்கையளித்த குசால் மல்லா 27 ரன்களிலும், திபேந்திர சிங் ஐரி 25 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அதன்பின் களமிறங்கிய நேபாள் அணி வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் நேபாள் அணியானது 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்கதேச அணியானது 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.